நவீன வாழ்க்கை முறையால் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. குடல் அலர்ஜி, IBS, செரிமான சிக்கல்கள் போன்றவை பலரின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கின்றன. குடல் ஆரோக்கியம் சரியாக இல்லையென்றால், அது உடல் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். இதற்கான தீர்வுகளை இயற்கை உணவுப் பொருட்களிலேயே காண்பது சிறந்தது.
அந்த வகையில், சியா விதைகள் (Chia Seeds) மற்றும் தயிர் (Curd) ஆகிய இரண்டையும் சேர்த்து உட்கொள்வது குடல் நலனுக்குப் பெரும் பலன் தரும் என காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் ஜோசப் சல்ஹாப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த தகவலில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் என்ன கூறினார் என்பதை அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.
“தண்ணீரா? தயிரா?” – மருத்துவர் பதில்
சியா விதைகளை தண்ணீருடன் குடிக்கலாமா அல்லது தயிரில் கலக்கலாமா என்ற கேள்விக்கு, “தண்ணீருடன் குடித்தால் நார்ச்சத்து மற்றும் ஈரப்பதம் கிடைக்கும். ஆனால் தயிருடன் சேர்த்தால் அது குடல் நலனுக்குப் பெரும் பலனை அளிக்கும்” என அவர் கூறியுள்ளார்.
நார்ச்சத்து + ப்ரோபயாட்டிக்ஸ் = பியூடிரேட்
மருத்துவர் மேலும் விளக்குகையில், “சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடல் பாக்டீரியாவுக்கு ஊட்டச்சத்தாக செயல்படும். அதே நேரத்தில் தயிர், ப்ரோபயாட்டிக்ஸ் எனப்படும் நல்ல பாக்டீரியாவை உடலுக்குள் சேர்க்கிறது. இரண்டும் சேர்ந்து பியூடிரேட் (Butyrate) எனப்படும் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலத்தை உருவாக்குகிறது. இது குடல் சுவர் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது, அழற்சியை குறைக்கிறது” என்றார்.
பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது
அவர் மேலும் கூறுகையில், “தயிர் - புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களையும் தருகிறது. தொடர்ந்து தயிரை உட்கொள்பவர்கள் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து குறைவாகக் காணப்படுகிறார்கள். தயிருடன் சியா விதைகளின் நார்ச்சத்தையும் சேர்த்துக் கொண்டால், குடலை இன்னும் சிறப்பாகப் பாதுகாக்கும் சக்தி கிடைக்கும்” எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறு எடுத்துக்கொள்வது?
* ஒரு கப் பச்சை தயிர் எடுத்துக்கொள்ளவும்.
* அதில் ஒரு மேசைக்கரண்டி சியா விதைகள் சேர்க்கவும்.
* 10 நிமிடங்கள் ஊற விடவும்.
இவ்வாறு தினமும் எடுத்துக்கொண்டால், குடல் ஆரோக்கியம் மேம்படும்.
View this post on Instagram
இறுதியாக..
சியா விதைகள் மற்றும் தயிர் சேர்த்து உட்கொள்வது குடல் ஆரோக்கியத்திற்கான ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த கலவை. குடலை சுத்தமாகவும், அழற்சியின்றியும் வைத்துக் கொள்ளும் திறனுடன், நீண்டகால நரம்பியல் மற்றும் குடல் நோய்களைத் தடுக்க உதவக்கூடியது.