Climbing 50 Stairs a Day: வொர்க் ப்ரம் ஹோமாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி பரபரப்பான வேலை காரணமாக இருக்கையை விட்டு எழுந்திருக்கவே மறந்துவிடுகிறோம். இதனால் உடல் பருமன், நீரழிவு நோய், சிறுநீரக பாதிப்பு, இதய நோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது.
இப்போதெல்லாம் மருத்துவமனைக்கு சென்றாலே மருத்துவர்கள் மருந்து சீட்டுடன் அனைத்து நோயாளிகளுக்கும் கொடுக்கும் மிக முக்கியமான அட்வைஸில் ஒன்றாக நடைபயிற்சியும் மாறிவிட்டது. தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது மிகவும் ஆரோக்கியமானது என்றாலும், மாறிவிட்ட வாழ்க்கை முறையால் தற்போது யாரிடமும் அவ்வளவு நேரம் இருப்பதில்லை.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் துலேன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம், தினசரி 50 படிக்கட்டுகள் ஏறுவதன் மூலம் இதய நோய்களின் பாதிப்பை கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை குறைக்கக்கூடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவு சொல்வது என்ன?
உலக அளவில் பக்கவாதம், தமனி நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு இருதய நோய் (ASCVD) போன்ற இருதய நோய்கள் பெரும்பாலான இறப்பிற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இதுகுறித்து துலேன் பல்கலைக்கழக பொது சுகாதாரம் மற்றும் ட்ராப்பிக்கள் மெடிசின் துறை பேராசிரியர் டாக்டர் லு குய் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் உயரமான படிக்கட்டுகளில் தீவிரமாக ஏறுவது, கார்டியோ உடற்பயிற்சி செய்வதற்கு நிகரான பலன்களை இதயத்திற்கு தருவது கண்டறிப்பட்டுள்ளது.
குறிப்பாக படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவது பெருந்தமனி தடிப்பு இருதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிக அளவில் குறைப்பதாக மருத்துவர் லு குய் தெரிவித்துள்ளார். மேலும் தினசரி 50 படிக்கட்டுகள் ஏறுவதன் மூலம் இதய நோய்களின் பாதிப்பை கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை குறைக்கக்கூடும் என கண்டறிந்துள்ளார்.
4,50,000 பேர் பங்கேற்பு:
துலேன் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் 45,000 பேர் பங்கேற்றுள்ளனர். ஆய்விற்கு முன்னதாக ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களின் இதய நோய், குடும்ப வரலாறு, இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகள், மரபணு ஆபத்து காரணிகள் ஆகியவை குறித்து மதிப்பீடு செய்தனர்.
இதையும் படிங்க: மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் இயற்கை வழிகள் இதோ!
அதன் பின்னர் பங்கேற்பாளர்களிடம் வாழ்க்கை முறை, படிக்கட்டு ஏறும் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.
சுமார் 12.5 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் படி, “தினந்தோறும் அதிகமான படிக்கட்டுகளில் ஏறும் நபர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு” என்பது கண்டறியப்பட்டுள்ளது.
நடைப்பயிற்சி Vs படிகளில் ஏறுவது எது சிறந்தது?
சாலைகள், பூங்காக்கள் என சமதளமான இடத்தில் நடைபயிற்சி செல்வதை விட, படிக்கட்டுகளில் ஏறுவது அதிக நன்மை கொண்டது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் நடைபயிற்சியை விட படிகளில் ஏறும் போது தசைகளுக்கு அதிக செயல் திறன் தேவைப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள டீசைட் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் மூத்த விரிவுரையாளர் நிக்கோலஸ் பெர்கர் கூறுகையில், “கொஞ்சம் நேரம் படிக்கட்டு ஏறுவது கூட இதய செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.அதனால் தான் இந்த பயிற்சியில் ஈடுபடும் போது அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நீண்ட நேரம் நடைபயிற்சி செய்வதை விட, கொஞ்ச நேரம் படிகளில் ஏறுவது இதய நோய்க்கான அபாயத்தை பெரும் அளவில் குறைக்கும். அவை உங்கள் இதயத்துடிப்பு, ஆக்ஸினேற்றம் போன்ற அதிகரிக்க உதவும்” என்கிறார்.
எனவே தினசரி 50 படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் இதய நோய்களின் பாதிப்பை கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதை கருத்தில் கொள்வது நமது உடல் நலத்திற்கு நல்லது.
Image Source: Freepik