
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பெரும்பாலானவர்கள் காலை உணவை தவிர்த்து, மாலையில் அல்லது மதிய உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிடுகிறார்கள். சிலர் சப்போட்டா, வாழைப்பழம், கொய்யா போன்ற இனிப்பான பழங்களை உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் பலருக்கு ஒரு சந்தேகம் — உணவுக்குப் பிறகு பழம் சாப்பிடுவது நல்லதா? இது செரிமானத்தை பாதிக்குமா? இந்தக் கேள்விக்கு விடை அளிக்க ஜெய்ப்பூரில் உள்ள ஏஞ்சல்கேர் நியூட்ரிஷன் அண்ட் வெல்னஸ் சென்டரின் இயக்குநர் மற்றும் உணவியல் நிபுணர் அர்ச்சனா ஜெயின் விளக்கமளித்துள்ளார்.
உணவுக்குப் பிறகு பழம் சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்குமா?
அர்ச்சனா ஜெயின் கூறுகையில், “பழங்களில் உள்ள நார்ச்சத்து, பிரக்டோஸ் மற்றும் இயற்கை என்சைம்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், அதிக உணவுடன் சேர்த்து பழம் சாப்பிட்டால் செரிமான செயல்முறை மெதுவாகி விடும்,” என்றார். அதாவது, உடல் அதிக உணவை ஜீரணிக்க முயற்சிக்கும் போது, பழமும் வயிற்றில் நீண்ட நேரம் தங்கி விடுகிறது. இதன் விளைவாக வீக்கம், வாயு, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
சாப்பிட்ட உடனே பழம் சாப்பிடுவது ஏன் தவறு?
“உணவுக்குப் பிறகு உடனே பழம் சாப்பிடுவது செரிமானத்தைக் குழப்பி அமிலத்தன்மையை அதிகரிக்கலாம். எனவே, உணவு மற்றும் பழம் இடையே குறைந்தது 1 முதல் 1.5 மணி நேரம் இடைவெளி வைப்பது அவசியம்,” என்று அர்ச்சனா ஜெயின் கூறுகிறார். இதனால், உடல் முன்பு எடுத்த உணவை முழுமையாக செரிமானித்த பின் பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்கள் சரியாக உடலில் உறிஞ்சப்படும்.
ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் ஷ்ரே சர்மா கூறுகையில், “ஒவ்வொரு உணவிற்கும் தனித்த செரிமான நேரம் உள்ளது. பழங்கள் இலகுவானவை, அதனால் விரைவாக ஜீரணமாகும். ஆனால், அரிசி, பருப்பு, ரொட்டி போன்ற உணவுகள் கனமானவை, அதிக நேரம் எடுக்கும். இதனால், கனமான உணவுக்குப் பிறகு பழம் சாப்பிட்டால் அது வயிற்றில் நொதித்து வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்,” என்கிறார். ஆயுர்வேதத்தின் படி, பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவிலிருந்து தனியாக சாப்பிட வேண்டும். இது அவற்றின் சத்துக்கள் உடலில் விரைவாக உறிஞ்சப்பட உதவும்.
பழம் சாப்பிட சரியான நேரம் எது?
உணவியல் நிபுணர்கள் மற்றும் ஆயுர்வேத நிபுணர்கள் இருவரும் கூறுவது ஒன்றே — பழங்களை சாப்பிட சிறந்த நேரம் அதிகாலை அல்லது உணவுக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்து. காலையில் பழம் சாப்பிடுவது உடல் நச்சுக்களை நீக்கி, உடனடி ஆற்றலை அளிக்கிறது. இரவில் அல்லது உணவுக்குப் பிறகு பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அந்த நேரங்களில் செரிமானம் மெதுவாக இருக்கும். இதனால், பழம் வயிற்றில் நீண்ட நேரம் தங்கி வாயு, கனத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இறுதியாக..
உணவுக்குப் பிறகு உடனே பழம் சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கும் என்பது உண்மை. இதனால், வாயு, அமிலத்தன்மை, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, ஆரோக்கியமான செரிமானத்திற்காக பழங்களை எப்போதும் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து சாப்பிடுவது சிறந்தது.
Disclaimer: இந்தக் கட்டுரை உணவியல் நிபுணர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களின் பொது ஆலோசனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை மட்டுமே. இதை பின்பற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகுவது அவசியம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 30, 2025 22:13 IST
Published By : Ishvarya Gurumurthy