
Why you should drink amla and aloe vera juice on an empty stomach: நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு காலை நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுமுறையில் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஏனெனில் காலை நேர உணவுகள் நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பதுடன் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நீண்ட நேர இரவு ஓய்வுக்குப் பிறகு, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகளின் மீது கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நாளை எவ்வாறு தொடங்குகிறோம் என்பதற்கு ஆயுர்வேதம் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.
எனவே தான், ஆயுர்வேதத்தில் காலை நேரத்தில் சில மூலிகைகள் மற்றும் அவற்றின் சாறுகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், சிறந்த ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இந்த மூலிகைகளில் நெல்லிக்காய் மற்றும் கற்றாழை இரண்டுமே தனித்தனியாக பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. ஆனால், இதன் சாறுகளைக் கலந்து உட்கொள்வதன் மூலம் அன்றாட பிரச்சனைகள் பலவற்றை குணப்படுத்தலாம். இதில் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய், கற்றாழை சாற்றைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Aloe Vera Juice: தினமும் காலையில் கற்றாழை ஜூஸ் குடித்தால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்!
வெறும் வயிற்றில் ஆம்லா, கற்றாழை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
எடை இழப்புக்கு
எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் அல்லது மெதுவான வளர்சிதை மாற்றம் உள்ளவர்களுக்கு ஆம்லா, கற்றாழை சாறு மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு கற்றாழையில் உள்ள கொழுப்பை எரிக்கும் பண்புகளே காரணமாகும். மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இந்த பானம் இயற்கையாகவே பசியைக் கட்டுப்படுத்தி, நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.
செரிமான அமைப்பை ஆதரிக்க
காலையில் வெறும் வயிற்றில் ஆம்லா மற்றும் கற்றாழை சாறு குடிப்பது வயிற்றை நன்கு சுத்தம் செய்ய உதவுகிறது. கற்றாழையில் உள்ள இயற்கையான மலமிளக்கி பண்புகள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும், நெல்லிக்காய் செரிமான நொதிகளை செயல்படுத்துவதன் மூலம் அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனையை நீக்குகிறது. காலையில் கனமான வயிறு உணர்வைச் சந்திப்பவர்களுக்கு இந்த சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த
கற்றாழை, நெல்லிக்காய் இரண்டும் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரை அணுகிய பிறகு இந்த சாற்றை அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். எனினும், இதை உட்கொள்வதற்கு முன்னதாக வழக்கமான சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு
உடலை சுத்தப்படுத்துவதில் கல்லீரல் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்த நெல்லிக்காய் மற்றும் கற்றாழை சாறு அருந்துவது கல்லீரலை நச்சு நீக்கி அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. சில நோய்களின் காரணமாக அதிகமாக மருந்துகளை உட்கொள்பவர்கள், வெளியே உணவு உண்பவர்கள் அல்லது மது அருந்துபவர்களுக்கு இந்த சாறு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு நிபுணர் தரும் சிம்பிள் அலோவேரா ரெசிபி! இப்படி செஞ்சி பாருங்க
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும் கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கிறது. மாறிவரும் காலநிலையில், வைரஸ் தொற்று அல்லது ஒவ்வாமைகளிலிருந்து பாதுகாக்க இந்த சாறு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
சருமம், முடி ஆரோக்கியத்திற்கு
சருமத்தில் அடிக்கடி முகப்பரு ஏற்பட்டாலோ, தலைமுடி உயிரற்றதாகி அதிக முடி உதிர்வு ஏற்பட்டாலோ அதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களாக இருக்கலாம். இந்நிலையில் நெல்லிக்காய், கற்றாழை சாறு அருந்துவது உடலை உள்ளிருந்து நச்சு நீக்கி, சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. மேலும் முடியை பலப்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது சருமத்தின் இயற்கையான பளபளப்பை மீண்டும் கொண்டு வருவதுடன், முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.
குறிப்பு
கர்ப்பிணிப் பெண்கள் அல்லது சமீபத்தில் பிரசவித்தவர்கள் மருத்துவரை அணுகிய பின்னரே இந்த சாற்றை உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்தவொரு சிறப்பு மருந்து அல்லது கடுமையான நோயையும் சந்திக்கும் நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை தங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்க்கக்கூடாது.
மேலும், இந்த சாற்றை அதிகளவு உட்கொள்வது வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும். எனவே இதை சீரான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். சில ஆயுர்வேத கடைகளிலும் ஆம்லா, கற்றாழை சாற்றை எளிதாகப் பெறலாம். மருத்துவரை அணுகிய பிறகு, இதை அன்றாட உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Juice: ஒருநாள் ரெண்டு நாள் இல்ல., கோடையில் தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாமா?
Image Source: Freepik
Read Next
உணவுக்குப் பிறகு வெல்லத்துடன் நெய் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
- Current Version