$
Ratan Tata passes away: இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா நேற்று (அக்டோபர் 9) இரவு காலமானார். 86 வயதான இவர் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதை ரத்தன் டாட்டா மறுத்து, வழக்கமான பரிசோதனைக்கே மருத்துவமனைக்கு வந்ததாக தெரிவித்தார்.
கணக்கு பார்க்காமல் செலவளிக்கும் பலரை நீ பெரிய ரத்தன் டாடாவா இப்படி செலவு செய்கிறாய் என்றுதான் அந்த நபரை அவர்களது நண்பர்கள் கூறுவார்கள். அப்படிப்பட்ட ரத்தன் டாடா வெளிப்புறத்தில் எளிமையின் தோற்றமாகவே திகழ்ந்தார். இந்த டிஜிட்டல் யுகத்திலும் பலர் இவரை மோட்டிவேஷனாக எடுத்துக் கொண்டு தங்களது வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸாக வைத்து வந்தனர். காஷ்மீர் முதல் குமரி வரை இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
ரத்தன் நேவல் டாடா சாதனை
2009 ஆம் ஆண்டில், உலகின் மிக மலிவான காரை நடுத்தர வர்க்கத்தினருக்குக் கிடைக்கச் செய்வதாக ரத்தன் டாடா அளித்த தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். அதன்படி டாடா நானோ ரூ.1 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தினார். இது புதுமை மற்றும் மலிவுக்கான அடையாளமாக மாறியது.
மருத்துவமனையில் ரத்தன் டாடா அனுமதி
கடந்த அக்டோபர் 7ம் தேதி மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு நள்ளிரவு 1 மணியளவில் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சில தகவல்கள் தெரிவித்தன. ஆனால் ரத்தன் நேவல் டாடா இதை மறுத்து தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், "எனது உடல்நிலை குறித்து சமீபத்திய வதந்திகள் பரவுவதை நான் அறிவேன், மேலும் இந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.எனது வயது மற்றும் தொடர்புடைய உடல்நிலை காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன். கவலைக்கு எந்த காரணமும் இல்லை. நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன், பொதுமக்களும் ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
ரத்தன் நேவல் டாடா காலமானார்
இந்நிலையில் ரத்தன் நேவல் டாட்டா மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
"டாடா குழுமத்தை மட்டுமின்றி நமது தேசத்தின் கட்டமைப்பையும் வடிவமைத்த அவரது அளவிட முடியாத பங்களிப்புகள். உண்மையிலேயே, அசாதாரணமான தலைவரான திரு.ரத்தன் நேவல் டாடாவிடம் இருந்து நாங்கள் விடைபெறுகிறோம்" என்று தலைவர் என் சந்திரசேகரன், டாடா சன்ஸ் தெரிவித்துள்ளார்.
பரோபகாரத்தில் திரு. ரத்தன் நேவல் டாடாவின் பங்களிப்பை நினைவுகூர்ந்த திரு சந்திரசேகரன், "கல்வி முதல் சுகாதாரம் வரை அவரது முயற்சிகள் ஆழமாக வேரூன்றிய முத்திரையை விட்டுச் சென்றுள்ளன, அவை வரும் தலைமுறைகளுக்கு பயனளிக்கும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரத்தன் டாடா மரணத்திற்கு பிரதமர் மோடி அஞ்சலி
இந்த தகவல் வெளியான உடன் முக்கிய தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார், அதில் "இரக்கமுள்ள ஆன்மா மற்றும் அசாதாரண மனிதர்" என குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஸ்ரீ ரத்தன் டாடா ஜி ஒரு தொலைநோக்கு வணிகத் தலைவர், இரக்கமுள்ள ஆன்மா மற்றும் ஒரு அசாதாரண மனிதர். அவர் இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றிற்கு நிலையான தலைமையை வழங்கினார். அவர் அன்பானவர். அவரது பணிவு, கருணை மற்றும் நமது சமூகத்தை மேம்படுத்துவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நன்றி என பிரதமர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரத்தன் டாடா மரணத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அஞ்சலி
"ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகம் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் நீடித்த முத்திரையை பதித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், டாடா சமூகத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.