Food for Increase Platelets: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இத்தருணத்தில் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படும், அதிலிருந்து மீள உதவும் இயற்கை வழிகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்…
கொசுக்களால் பரவும் வைரஸ் நோய்களில் டெங்குவும் ஒன்று. டெங்கு வைரஸ் முக்கியமாக ஏடிஸ் எஜிப்டி இனத்தைச் சேர்ந்த பெண் கொசுக்களால் பரவுகிறது. இந்த கொசுக்கள் சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ்களின் கேரியர்களாகவும் செயல்படுகின்றன.
இதில் கவலை தரக்கூடிய விஷயம் என்னவென்றால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் பிளேட்லெட் எண்ணிக்கை குறைகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு. எனவே டெங்கு காய்ச்சல் வரும் போது, அப்படி காய்ச்சல் வரும்போது மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளுடன் குறிப்பிட்ட வகை பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

பிளேட்லெட்டுகள் குறைய காரணம் என்ன?
- உடலில் பிளேட்லெட்டுகள் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன,
- டெங்கு, மலேரியா, வைரஸ் தொற்று ஏற்படும் போது பிளேட்லெட்டுகள் குறையும்.
- சிலருக்கு பிறக்கும் போதே மரபணு பிரச்சனைகள் காரணமாக பிளேட்லெட் எண்ணிக்கை குறைவக இருக்கும்.
- தற்போது இதய நோய் உள்ளவர்களுக்கு ரத்தம் மெலிவதால் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடலில் பிளேட்லெட்டுகள் குறைவாக இருக்கும்போது, காயம் இல்லாதபோதும் இரத்தப்போக்கு ஏற்படும். பிளேட்லெட்டுகள் தங்கள் செயல்பாட்டைச் சரியாகச் செய்ய முடியாவிட்டால் இரத்தப்போக்கு நிற்காது. இதற்கு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதாலோ அல்லது பிளேட்லெட்டுகளின் தரம் குறைவதாலோ இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
1.மாதுளை:
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மேலும் இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
2.பப்பாளி இலைகள்:
பப்பாளி பழம் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உண்மையில் பப்பாளிப் பழம் மட்டுமல்ல.. இந்த இலைகளிலும் பல ஆரோக்கியம் சார்ந்த பண்புகள் உள்ளன. குறிப்பாக இதில் ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் 24 மணி நேரத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும் என மருந்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
3. கோதுமை புல்:
ஆம், கோதுமை புல்லில் பல தனித்துவமான பண்புகள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே இந்த புல்லை சாறு செய்து சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால், ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை எளிதாக அதிகரிக்க முடியும்.
4. பீட்ரூட்:
சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட், உடலில் இரத்த அளவை அதிகரிக்கும். இது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புவோருக்கு கேரட் மற்றும் பீட்ரூட் சாறு நல்ல பலனைத் தரும்.
5. வைட்டமின் சி உணவுகள்:
வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கு அவசியமானது. வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை, கிவி, கீரை, நெல்லிக்காய், ப்ரோக்கோலி, தக்காளி மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிடுவது, பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த உணவுகள் உதவும்.
6. வைட்டமின் கே நிறைந்த உணவுகள்:
வைட்டமின் கே நிறைந்த உணவுகளும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழம், முட்டை, கீரைகள், கல்லீரல், இறைச்சி, முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.