மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் சிமெண்டால் செய்யப்பட்ட போலி பூண்டு இருப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்தியாவசிய சமையல் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், சில விற்பனையாளர்கள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, போலி பூண்டை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சிமெண்ட் பூண்டு விற்பனை
அகோலாவின் பஜோரியா நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சுபாஷ் பாட்டீலின் மனைவி, சிமெண்ட் பூண்டு விற்பனை செய்து தெருவோர வியாபாரி ஒருவரால் ஏமாற்றப்பட்டதைக் கண்டறிந்தபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முக்கிய கட்டுரைகள்
பாட்டீலின் மனைவி தனது வீட்டிற்கு வெளியே தெருவோர வியாபாரி ஒருவரிடம் இருந்து 250 கிராம் பூண்டு வாங்கியிருந்தார். இருப்பினும், பூண்டை உரிக்க முயற்சிக்கும்போது, முடியவில்லை. பின் என்ன என்று பார்த்தப்போது உடைக்க வேண்டிய நிலை வந்துள்ளது.
இதை கூர்ந்து கவனித்தபோது, பூண்டு உண்மையில் சிமெண்டால் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது, அது உண்மையான பூண்டை போலவே வெள்ளை பூச்சுடன் இருந்துள்ளது.
உண்மையான பூண்டு போலவே சிமெண்ட் பூண்டு
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த பாட்டீல், உண்மையான பூண்டு என்ற போர்வையில் தெருவோர வியாபாரிகளால் போலி பூண்டு விற்பனை செய்கின்றனர், நுகர்வோர் ஏமாற்றப்படுகின்றனர், இது பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என கூறியுள்ளார்.
மாவட்டத்தில் உண்மையான பூண்டுடன் சிமெண்ட் பூண்டு கலந்து விற்பனை செய்யப்படுவதால், நுகர்வோர்கள் உண்மையான பூண்டையும், போலியான பூண்டையும் பிரித்தறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். காரணம், போலி பூண்டும் உண்மையான பூண்டை போலவே தோற்றமளித்துள்ளது.
பூண்டு என்பது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பொருளாகும். அதில் இப்படி மோசடி நடக்கிறது என்பதைவிட அடுத்தடுத்த காய்கறிகளில் இதுபோன்ற மோசடி நடப்பதை தடுக்க வேண்டும். பூண்டு விலை உயரும் நேரத்தில் சிமென்ட் மூலம் நேர்த்தியாக தயாரித்து அதை வெள்ளைப் பூச்சுடும் அப்படியே பூண்டு போல் தோற்றமளிக்க வைத்து, அதை ஒரிஜினல் பூண்டுடன் எடை போட்டு விற்பனை செய்கிறார்கள் என்றால், இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடையில் விற்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என பலருக்கும் தெரியும். சரி, வீட்டில் வாங்கி சமைக்கலாம் என நினைத்தால் இப்போது காய்கறிகளிலும் போலி விற்கப்படுகிறது என்ற தகவல் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற செயலை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.
Image Source: Social Media