கோடை வெப்பத்தினால் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். அடிக்கடித் தண்ணீர் குடிப்பதுடன், சில சத்தான பானகத்தைச் செய்து அருந்துவது, சோர்வை நீக்கி, சுறுசுறுப்பைத் தருவதுடன், உடலுக்குத் தெம்பையும் கூட்டும். உடலைக் குளிரவைக்கும் சில பானகங்களை, சமையல் நிபுணர் தாமு செய்து காட்டியுள்ள சில சம்மர் ஸ்பெஷல் பானங்கள் இதோ...
கேழ்வரகு முளைப்பால்:
கேழ்வரகில் வைட்டமின்டி, இரும்பு, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், உடலுக்கு மிகவும் ஏற்றது. உடல் உஷ்ணத்தைப் போக்கி, நல்ல குளிர்ச்சியைத் தரும்.
தேவையானவை:
- கேழ்வரகு – 250 கிராம்
- பனை வெல்லம் – 50 கிராம்
செய்முறை:
- நன்றாக முற்றி விளைந்த கேழ்வரகை ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, முளைக்கவிடவும்.
- முளைவிட்ட கேழ்வரகை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
- பிறகு, ஒரு பருத்தித் துணியால் வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய கேழ்வரகுப் பாலுடன், பனை வெல்லம் சேர்த்து, நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- சுவையான கேழ்வரகு முளைப்பால் தயார்.
ஆவாரம்பூ டீ :
தாகத்தைத் தணிக்கும். வியர்வை துர்நாற்றத்தைப் போக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, இந்த டீ மிகவும் நல்லது. சர்க்கரையின் அளவைக் குறைத்து, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சோர்வு நீங்கும். முகத்துக்குப் பொலிவைக் கொடுக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், சருமம் சார்ந்த பிரச்னைகள் தீரும்.
தேவையானவை:
ஆவாரம்பூ, ஆவாரம் பட்டை, பனை வெல்லம், ஏலக்காய்த் தூள்.
செய்முறை:
- சிறிதளவு ஆவாரம் பூ மற்றும் ஆவாரம் பட்டையை எடுத்து, தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்கவைக்கவும்.
- பிறகு, தேவையான அளவு வெல்லத்தைச் சேர்த்து, இறக்குவதற்கு முன்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும்.
- ஆவாரம் பூ அதிக துவர்ப்புச் சுவைகொண்டது. இதனால் மிகக் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.
புதினா டீ:
வயிற்று வலியைக் கட்டுபடுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். முகம் பொலிவுபெறும். பருக்கள், கட்டிகள் வராமல் காக்கும். ஜீரணத்துக்கு நல்லது.
தேவையானவை:
- புதினா, - சிறிதளவு
- ஏலக்காய் -சிறிதளவு
- பனை வெல்லம் -தேவையான அளவு
செய்முறை:
- புதினா இலைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, பனை வெல்லம் சேர்த்து, இறக்குவதற்கு முன்பு, ஏலக்காய்த் தூளைச் சேர்க்கவும்.
- நான்கைந்து புதினா இலைகள் போதுமானது. அதிக அளவு சேர்த்தால், தொண்டையில் எரிச்சல் ஏற்படும்.
துளசி டீ:
துளசியில் ஆக்சிஜன் அதிக அளவு இருப்பதால், உடலுக்கு மிகவும் நல்லது. அதிகமான வியர்வையைக் கட்டுபடுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். முகப்பொலிவுக் கூடும்.
தேவையானவை:
துளசி, ஏலக்காய் – சிறிதளவு, பனை வெல்லம் – தேவையான அளவு
செய்முறை:
- ஆவாரம் டீ போலவே இதையும் தயாரிக்க வேண்டும்.
- ஆவாரம் பூ, பட்டை சேர்ப்பதற்குப் பதிலாக, துளசி இலையைச் சேர்த்துத் தயாரிக்கலாம்.
நெல்லிக்காய் ஜூஸ்:
நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது. சோர்வாக இருக்கும் போது பருகினால், உடலுக்கு நல்ல சக்தியைத் தரும். ரத்தத்தைச் சுத்தப்
படுத்தும். வியர்வையை வெளியேற்றும்.