"கேரட் ஜூஸ் குடித்தால் சருமம் சிவப்பாக மாறும்" என்ற கருத்து பலரிடமும் பரவி வருகிறது. ஆனால், இதற்கான அறிவியல் ஆதாரம் என்ன? உண்மையில் கேரட் நம் சரும நிறத்தை மாற்றுமா? என்பதற்கான தெளிவான விளக்கத்தை பிரபல குழந்தை நல ஆலோசகர் மற்றும் உணவுமுறை நிபுணர் மருத்துவர் அருண்குமார் பகிர்ந்துள்ளார்.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் & சரும ஆரோக்கியம்
மருத்துவர் விளக்கத்தில், கேரட்டில் பீட்டா கரோட்டின் என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ளது. இது நம் உடலில் வைட்டமின் A-ஆக மாறி, சருமத்தின் ஆரோக்கியத்தையும் பிரகாசத்தையும் மேம்படுத்துகிறது. அதனால், சரும பிரச்சனை கொண்டவர்களுக்கு கேரட், பப்பாளி, ஈரல் போன்ற உணவுகள் பயனுள்ளதாக இருக்கும்.
"நிறம் மாறும்" என்பது ஒரு தவறான நம்பிக்கை
"கேரட் சாப்பிட்டால் கருப்பானவர்கள் சிவப்பாக மாறிவிடுவார்கள்" என்பது தவறான நம்பிக்கை என மருத்துவர் கூறுகிறார். காரணம், நம் உடலில் உள்ள மெலனின் (Melanin) தான் சரும நிறத்தை நிர்ணயிக்கிறது. கேரட் ஜூஸ் குடிப்பதால், மெலனின் அளவை மாற்ற இயலாது.
அளவுக்கு மீறினால் பக்கவிளைவு
அதிக அளவில் கேரட் சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கிறார். உதாரணமாக, ஒரு நாளைக்கு அரை கிலோ கேரட் தொடர்ந்து சாப்பிட்டால், கரோட்டினிமியா (Carotenemia) என்ற நிலை உருவாகும். இதில், பீட்டா கரோட்டின் அதிகமாக சேர்ந்து, சருமம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் மாறும். இது ஆரோக்கியப் பிரச்சனையாகும்.
View this post on Instagram
மருத்துவரின் பரிந்துரை
கேரட் ஜூஸை அளவோடு மட்டுமே உட்கொள்ள வேண்டும். சரும ஆரோக்கியத்துக்காக கேரட் உதவினாலும், இயற்கையான நிறத்தை மாற்ற முடியாது. எனவே, "அழகுக்காக அதிகமாக குடிக்கலாம்" என்ற தவறான நம்பிக்கையை விட்டு, மிதமான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.