வீட்டின் ஆரோக்கியம் சமையலறையிலிருந்தே தொடங்குகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. சத்தான உணவுகளை சமைத்தாலும், அதை சமைக்கும் பாத்திரங்களும் பயன்படுத்தும் பொருட்களும் நச்சுத்தன்மை கொண்டிருந்தால், அந்த ஆரோக்கியம் தகர்ந்து விடும்.
ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற குடல் நிபுணர் டாக்டர் சௌரப் செதி, சமீபத்தில் வெளியிட்டுள்ள சமூக ஊடக வீடியோவில், உங்கள் சமையலறையில் எப்போதும் வைத்திருக்கக் கூடாத 3 முக்கிய பொருட்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
சமையலறை பாதுகாப்பு: உடனே அப்புறப்படுத்த வேண்டிய 3 நச்சு பொருட்கள்!
பிளாஸ்டிக் சமையல் பாத்திரங்கள்
சமையலின் போது அதிக வெப்பம் ஏற்படும். இதனால்பிளாஸ்டிக் பாத்திரங்கள், Bisphenol A (BPA) என்னும் இரசாயனத்தை வெளிப்படுத்தும். இது உணவுகளில் கலந்து உடலுக்குள் சென்றால், நீரிழிவு, உடல் பருமன், மலட்டுத்தன்மை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில புற்றுநோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
பிளாஸ்டிக் காய்கறி நறுக்கும் பலகை
வீடுகளில் பொதுவாக காணப்படும் பிளாஸ்டிக் நறுக்கும் பலகை, காலப்போக்கில் கீறல்களால் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உண்டாகி உணவுடன் கலந்து விடுகிறது. இதனால் உடலில் வீக்கம், ஹார்மோன் சீர்குலைவு மற்றும் நச்சுத்தன்மை போன்ற கடுமையான பிரச்சனைகள் உருவாகும் அபாயம் அதிகம்.
கீறல் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள்
சுலபம் என்பதற்காக பலர் பயன்படுத்தும் நான்ஸ்டிக் பாத்திரங்கள், கீறல் விழுந்தால் Perfluoroalkoxy alkane (PFA) போன்ற நச்சுப் பொருட்கள் உணவில் கலந்து விடும். இது உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு பிரச்சனைகள் மற்றும் இனப்பெருக்க சிக்கல்களுக்கு காரணமாக இருக்கலாம்.
நிபுணர் அறிவுரை
“சமையலறை என்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. எனவே உங்கள் வீட்டில் பிளாஸ்டிக் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பலகைகள், கீறல் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்துங்கள்” என டாக்டர் சேதி வலியுறுத்தியுள்ளார்.
View this post on Instagram
Disclaimer: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் கல்வி மற்றும் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. இது எந்தவொரு மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கான மாற்றாக கருதப்படக்கூடாது. உடல்நல பிரச்சனைகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின், தகுந்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம்.