How to use mango seed powder for dandruff: இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக பொடுகு பிரச்சனை அமைகிறது. இது ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இது உச்சந்தலையை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் முடி உதிர்தல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் அதிகரிக்கக்கூடும். குளிர்காலம், கோடை அல்லது மழை என எந்த காலமாக இருந்தாலும், பொடுகு நோயால் பாதிக்கப்படும் சூழல் உண்டாகிறது. இதன் காரணமாக, முடி வறண்டு, பலவீனமாக மற்றும் உயிரற்றதாக மாறக்கூடும்.
எனினும் சிலர் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட சந்தையில் கிடைக்கும் பல வகையான ஷாம்புகள் மற்றும் முடி சிகிச்சைகளைக் கையாள்கின்றனர். ஆனால் இவை எப்போதும் நிரந்தர தீர்வை வழங்குவதில்லை. மேலும் இதில் ரசாயனங்களின் பக்க விளைவுகளும் இருக்கலாம். இந்த சூழ்நிலையில், ஆயுர்வேத வைத்தியங்களைக் கையாள்வது ஒரு சிறந்த தேர்வாக அமையும். மேலும் இது பாதுகாப்பான தேர்வாக இருக்கும். அதன் படி, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வேர்களில் இருந்து பொடுகை நீக்கவும் உதவும் பல மூலிகைகள் மற்றும் இயற்கை கூறுகளில் ஒன்றாக மாம்பழ விதை அமைகிறது.
இதில், யோகா, இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணரும், மேவார் பல்கலைக்கழகப் பேராசிரியரும், ஜெய்ப்பூரின் பாபுநகரில் உள்ள இயற்கை மருத்துவ மருத்துவமனையின் மூத்த மருத்துவருமான டாக்டர் கிரண் குப்தா அவர்கள் மா விதை பவுடரை முடிக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பொடுகுத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: முடி வளர்ச்சி முதல் பொடுகு குறைப்பு வரை.. வலுவான முடி ஆரோக்கியத்திற்கு துளசி இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க
பொடுகு சிகிச்சைக்கு மாங்காய் விதைகள்
ஆயுர்வேதத்தில், நீண்ட காலமாகவே முடி பராமரிப்புக்காக பழங்கள், விதைகள் மற்றும் மருத்துவ மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றாக மாம்பழ விதை அமைகிறது. இவை உச்சந்தலையை ஈரப்பதமாக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவுகிறது.
நாம் பெரும்பாலும் மாம்பழ விதையை சாப்பிட்ட பிறகு தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் ஆயுர்வேதத்தில் இது ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. மாம்பழ விதையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை உச்சந்தலையை ஊட்டமளிக்க உதவுகிறது. இவை பூஞ்சை தொற்றுக்களைத் தடுத்து, பொடுகைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
பொடுகு நீங்க மாங்காய் விதையை பயன்படுத்துவது எப்படி?
மாங்காய் விதை மற்றும் பால் ஹேர் பேக்
பாலுடன் மாங்காய் விதையை சேர்த்து முடிக்கு பயன்படுத்துவது வறண்ட உச்சந்தலை, அரிப்பு மற்றும் உயிரற்ற தலைமுடி போன்றவற்றிற்கு நன்மை பயக்கும். மேலும் பாலில் உள்ள புரதங்கள் மற்றும் கொழுப்புகள், உச்சந்தலையை ஈரப்பதமாக்கி, முடிக்கு பளபளப்பை சேர்க்கிறது.
இந்த ஹேர் பேக்கை தயார் செய்ய, உலர்ந்த மாங்காய் கூந்தல் பொடியை எடுத்து, போதுமான கொழுப்புள்ள பாலுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் நன்கு தடவி, 30 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு, லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி முடியைக் கழுவலாம்.
நன்மைகள்
- இந்த ஹேர் பேக் பயன்படுத்துவது பொடுகு மற்றும் அரிப்பைக் குறைக்கிறது.
- உச்சந்தலையில் ஆழமாக ஈரப்பதமாக்குகிறது.
- முடியின் வேர்களை வலுவடையச் செய்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dandruff: பொடுகு ஏன் மீண்டும் மீண்டும் வருகிறது? எந்த வகையான ஷாம்பு பயன்படுத்துவது நல்லது?
மாம்பழ விதை மற்றும் மோர் ஹேர் பேக்
மோரில் உள்ள புரோபயாடிக்குகள் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை உச்சந்தலையை ஆழமாக சுத்தப்படுத்தி பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது. இந்த தீர்வு, குறிப்பாக எண்ணெய் பசை உள்ளவர்களுக்கும், முடி ஒட்டும் தன்மை கொண்டவர்களுக்கும் நன்மை பயக்கும்.
இந்த ஹேர் பேக்கை தயார் செய்ய, 1-2 மாம்பழ உலர்ந்த விதைகளை அரைத்து பொடி செய்ய வேண்டும். பின்னர் இதில் 2-3 தேக்கரண்டி புதிய மோர் சேர்த்து ஒரு பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்குப் பிறகு லேசான மூலிகை ஷாம்பூ கொண்டு கழுவலாம். மோர் மற்றும் மாம்பழ விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த ஹேர் பேக், தலைமுடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- உச்சந்தலையை ஆழமாக சுத்தம் செய்ய உதவுகிறது
- முடி உதிர்தலை படிப்படியாக நிற்க வைக்கலாம்
- பூஞ்சை தொற்று, பொடுகு மற்றும் அரிப்பு போன்றவற்றைக் குறைக்கிறது
முடிவுரை
பொடுகு பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள், ரசாயனப் பொருட்களைத் தவிர்ப்பதுடன், இயற்கையான தீர்வாக ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாம்பழ விதை ஹேர் பேக்கைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை மோர் மற்றும் பாலுடன் இதைப் பயன்படுத்துவது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவை முடியை வலுப்படுத்தவும், படிப்படியாக பொடுகு பிரச்சனையைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: உச்சந்தலை அரிப்பால் அவதியா? அதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து தெரிஞ்சிக்கோங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version