Cotton Candy Banned In Tamil Nadu: பெரியவர்கள் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் பஞ்சு மிட்டாயில், அவ்வளவு ஆபத்துகள் நிறைந்துள்ளதாம். பீச், பார்க், திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் பஞ்சு மிட்டாய், இனி தமிழகத்தில் பார்க்க முடியாது.
மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருள்களான ரோடமைன் பி, பஞ்சு மிட்டாயில் கலந்திருப்பதை உறுதி செய்து, தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரி அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசும் தடை விதித்துள்ளது.
அரசு ஆய்வகம் நடத்திய சோதனையில், கேன்சரை ஏற்படுத்தும் இரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் ரோடமைன் பி கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தல், பேக்கேஜிங் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும் என்று சுப்பிரமணியன் கூறினார்.