இன்றைய வாழ்க்கை முறை, அதிக மாசு, ரசாயன கலந்த தயாரிப்புகள் என பல காரணங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதித்து வருகின்றன. குறிப்பாக, பல்வேறு கெமிக்கல் கலந்த ஷாம்பூக்கள் நீண்ட காலத்தில் தலைமுடி உதிர்வு, நரை, உலர்ச்சி போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், இயற்கை மூலிகைகள் மற்றும் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி தலைமுடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் பழக்கம் மீண்டும் பிரபலமாகி வருகிறது. இந்த பதிவில், வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இயற்கை ஷாம்பூ மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.
இயற்கை ஷாம்பூ
பூந்திக்கொட்டை - சீயக்காய் - வெந்தயம்
பண்டைய காலம் முதல், பூந்திக்கொட்டை, சீயக்காய், வெந்தயம் ஆகியவை தலைமுடி அலசுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பூந்திக்கொட்டை இயற்கையான நுரை உருவாக்கும் தன்மை கொண்டது. இது தலைமுடியை சுத்தமாகவும், மென்மையாகவும் ஆக்குகிறது. சீயக்காய் முடி வேர்களை வலுப்படுத்துகிறது. வெந்தயம் தலையின் ஈரப்பதத்தை பாதுகாத்து, பொடுகை கட்டுப்படுத்துகிறது.
தயாரிப்பு முறையும் பயன்பாடும்
- பூந்திக்கொட்டை, சீயக்காய், வெந்தயம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து இரவில் ஊற வைக்கவும்.
- மறுநாள் காலை, இதை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- இதனை ஷாம்பூவுக்கு பதில் முடியில் தேய்த்து அலசவும்.
கற்றாழை ஜெல் - எலுமிச்சை சாறு
கற்றாழை ஜெல் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தைக் கொடுத்து, உலர்ச்சியை குறைக்கிறது. எலுமிச்சை சாறு தலையில் உள்ள பாக்டீரியா மற்றும் பொடுகை நீக்குகிறது.
பயன்பாடு
- சுத்தமான கற்றாழை ஜெலை எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கவும்.
- இந்த கலவையை தலையில் பூசி 15 நிமிடங்கள் விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
பச்சை பயிறு மாவு - மஞ்சள்
பச்சை பயிறு மாவு தலைமுடி மற்றும் தலையின் எண்ணெய் படலங்களை இயற்கையாக நீக்குகிறது. மஞ்சள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டது. இவை முடியை பிரகாசிக்கச் செய்யும்.
பயன்பாடு
- பச்சை பயிறு மாவில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும்.
- இந்த பேஸ்டை தலைமுடியில் தடவி, மெதுவாக மசாஜ் செய்து கழுவவும்.
கருவேப்பிலை - தேங்காய் பால்
கருவேப்பிலை முடிக்கு தேவையான பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்களை வழங்குகிறது. தேங்காய் பால் முடி வேர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. இவை நரைமுடியை தடுக்கிறது.
பயன்பாடு
- கருவேப்பிலையை நன்றாக அரைத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.
- தலைமுடியில் தடவி, 20 நிமிடங்கள் விட்டு கழுவவும்.
தயிர் - தேன்
தயிர் இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. தேன் ஈரப்பதத்தை பூட்டி வைத்துக் கொள்கிறது. இது உலர்ந்த முடிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
பயன்பாடு
- அரை கப் தயிரில் 2 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும்.
- தலைமுடி முழுவதும் தடவி, 15 நிமிடங்கள் விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
செம்பருத்தி பூ - வெந்தய விதை
செம்பருத்தி பூ, முடி வளர்ச்சியை தூண்டுகிறது. வெந்தய விதை முடி வேர்களை வலுப்படுத்துகிறது. இந்த கலவை முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
பயன்பாடு
- செம்பருத்தி பூவும், ஊறவைத்த வெந்தய விதைகளையும் அரைத்து பேஸ்ட் தயாரிக்கவும்.
- இதை தலைமுடி மற்றும் தலைச்சமையில் தடவி, 20 நிமிடங்கள் விட்டு கழுவவும்.
நிபுணர்கள் கூற்று
ஷாம்பு என்பது தலைமுடி சுத்தம் செய்ய ஒரு எளிய வழி என்றாலும், ரசாயன கலவைகள் காரணமாக நீண்ட காலத்தில் தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். இயற்கை ஹேர் வாஷ் முறைகள் தலைமுடி வேர்களை பாதுகாத்து, பொடுகு, உதிர்வு, உலர்ச்சி போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகின்றன. ஆனால், இதை தொடர்ந்து பயன்படுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பு
- இயற்கை ஹேர் வாஷ் பயன்படுத்தும் முன், எந்த ஒரு பொருளுக்கும் உங்களுக்கு ஒவ்வாமை இல்லையா என்று பரிசோதிக்கவும்.
- வாரத்தில் 2-3 முறை பயன்படுத்தினால் சிறந்த விளைவுகள் கிடைக்கும்.
- அதிக சூடான நீரைத் தவிர்க்கவும். வெதுவெதுப்பான நீர் பயன்படுத்துவது நல்லது.
இறுதியாக..
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க இயற்கை முறைகள் சிறந்த தேர்வாகும். கெமிக்கல் கலந்த தயாரிப்புகளைத் தவிர்த்து, வீட்டிலேயே கிடைக்கும் மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி தலைமுடியைப் பராமரிப்பது, உங்கள் முடி பிரச்சினைகளுக்கு நீண்டநாள் தீர்வாக அமையும்.