பெண்களுக்கு கரு முட்டை உருவாவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு, கருமுட்டைகள் நன்றாக உருவாகிறதா என ஸ்கேனில், ஃபாலிக்குலர் மானிட்டரிங் (Follicular monitoring) செய்யப்படும். கருமுட்டைகள் வளர்ந்து நன்கு பெரிதான பின்பு, அது வெடிப்பதற்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி, கருமுட்டைகள் வெடிக்கும் சமயத்தில், கணவரின் விந்தணுக்களைப் பெற்று இயக்கம் (motility) மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஆய்வகத்தில் தயார் செய்யப்பட்டு கருப்பைக்கு அனுப்பப்படுகிறது. கணவனும், மனைவியும் இயற்கையாகச் சேரும் போது யோனியில் விந்து தங்கும். ஆனால் தயார் செய்யப்பட்ட விந்துவை (semen) கர்ப்பப்பையில் கொண்டு போய் செலுத்தப்படும் முறை IUI சிகிச்சை எனப்படுகிறது.
இந்த சிகிச்சை யாருக்கெல்லாம் பரிந்துரைக்கப்படுகிறது?
விந்துப் பரிசோதனையில் வழக்கத்தை விட எண்ணிக்கை சற்றே குறைவாகவும் விந்து இயக்கத்தன்மை சற்றே குறைவாகவும் (motility) இருப்பவர்கள் IUI சிகிச்சை மேற்கொள்ளலாம். ஓவுலேசன் இன்டெக்சன் சிகிச்சையை ஐந்தாறு முறை செய்தும் வெற்றியடையாதவர்களுக்கு, சரியான நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ள இயலாதவர்களுக்கு, IUI சிகிச்சைமுறை பரிந்துரைக்கப்படுகிறது. லேசான எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) உள்ள பெண்களுக்கும், திருமணமாகி சில ஆண்டுகளாகி என்ன காரணம் என்றே தெரியாமல் கருத்தரிக்காமல் (Unexplained infertility) உள்ள பெண்களுக்கும் IUI சிகிச்சை அளிக்கலாம். IUI சிகிச்சை முறை என்பது இயற்கையான கருத்தரித்தலை விட ஒருபடிநிலை முன்பானதே அன்றி, மிக மேம்பட்ட ஒன்றாக நினைக்க முடியாது.
IUIயின் வெற்றியை அதிகரிக்க, எப்படித் தயாராக வேண்டும்?
IUI சிகிச்சையைப் பொறுத்தவரை பெண்ணிற்கு 35 வயதிற்கு மேலாகி விட்டால் வெற்றி விகிதம் குறைவு. திருமணமாகி ஓராண்டு காலமாகியும், கணவன் மனைவி கருத்தரித்தலுக்கு இயற்கையான முறையில் முயன்றும் கரு நிற்கவில்லை எனில், அடிப்படையான விந்தணு சோதனை, கருமுட்டை உருவாகிறதா என்பது குறித்த சோதனை, கருக்குழாய் சோதனைகளைச் செய்ய வேண்டும்.
இம்மூன்றும் சரியாக இருந்தும், வேறேதும் ஆபத்துக் காரணிகள் இல்லையெனில் அடுத்த ஒரிரு ஆண்டுகளுக்கு இயற்கையான முறையில் கருத்தரித்தலுக்கு முயற்சிக்கலாம். அப்போதும் கரு நிற்கவில்லை எனில் ஒவுலேசன் இன்டெக்சன் மருத்துவ முறைக்கு மாறிக்கொள்வது நல்லது. ஓவுலேசன் இன்டெக்சன் இரண்டு அல்லது மூன்று சுழற்சிகள் எடுத்த பின்னரும் நிற்கவில்லை எனில் கருக்குழாய் பரிசோதனை, விந்து பரிசோதனை செய்த பின்னர் IUI சிகிச்சைக்குச் செல்வது நல்லது.
IUI சிகிச்சைக்குப் பிறகு வெற்றி விகிதத்தை அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன?
- IUI செய்த பிறகு சிறுநீரகத் தொற்று, இருமல் சளி, காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ளும் போது வெற்றிவிகிதம் அதிகரிக்கும்.
- அதேபோல விந்துவின் தரமும் நன்றாக இருக்க வேண்டும்.
- இரண்டு கருக்குழாயில் ஒன்றாவது திறந்திருக்க வேண்டும்.
- ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்க வேண்டும்.
இதை கட்டாயம் செய்ய மறக்காதீர்கள்:
IUI தோல்வியுறும் போதும் IVF, ICSI சிகிச்சை முறைக்கு மாற வேண்டும். அதில் வெற்றி விகிதம் நன்றாகவே இருக்கும். இதில் பொதுவான பிரச்சனை என்னவென்றால் சிலர் பத்து முறைக்கு மேலும் தொடர்ந்து IUI சிகிச்சையை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். இதனால் வயதும் அதிகமாகி விடுகிறது. கருமுட்டையும் குறைந்து விடுகிறது. அதன் பிறகு IVF முயற்சிக்கும் போது அதன் வெற்றி விகிதம் குறைந்து விடுகிறது.
எனவே IUI இரண்டு, மூன்று முறை முயற்சித்த பிறகு, சிறந்ததொரு கருவுறுதல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று, கணவரின் விந்து பரிசோதனை (sperm morphology) மனைவியின் AMH (Anti-Mullerian hormone), ஹார்மோன் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் தொடர்ந்து IUI தொடர்வதா அல்லது IVF-ற்கு மாறுவதா என கேட்டு தெளிவு பெறுவது அவசியம்.
பெண்ணின் வயது 35 தாண்டும் போது மூன்று முறைக்கு மேல் IUI க்கு முயற்சிக்காமல் IVF சிகிச்சைக்கு மாறுவது நல்லது. பெண்ணிற்கு 35 வயதிற்கு கீழ் உள்ள போதும், பரிசோதனையில் விந்து இயல்பாக இருக்கும் போதும் 6 முறை IUI சிகிச்சையும் பின்பு IVF சிகிச்சை எடுத்துக் கொள்வதும் சிறந்தது.
Image Source: Freepik