Guidelines for Influenza: பருவ கால இன்ஃபுளூயன்ஸா என்பது கடுமையான சுவாச நோய்த்தொற்றாகும். பொதுவாக இந்தியாவில் ஜனவரி முதல் மார்ச் வரை பாதிக்கக்கூடிய காய்ச்சலான இது, மீண்டும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல் அல்லது தும்மல் மூலமாக பிறருக்கு எளிதில் பரவுகிறது. நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடுவதே சிறந்த வழியாகும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் பொதுவாக ஒரு வாரத்தில் குணமடையக்கூடும், தீவிர சந்தர்ப்பங்களில் மட்டுமே மருத்துவர்களின் கண்காணிப்பு தேவைப்படும்.
இன்ஃபுளூயன்ஸா வைரஸ் வகைகள்:
ஏ, பி, சி மற்றும் டி என 4 வகையான இன்ஃபுளூயன்ஸா வைரஸ்கள் உள்ளன.
- இன்ஃபுளூயன்ஸா ஏ வகை வைரஸ்கள் மட்டுமே தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன. இதன் துணை வகைகளான A (H1N1) மற்றும் A (H3N2) ஆகியவை மனிதர்களிடையே நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடியவையாகும்.
- இன்ஃபுளூயன்ஸா பி வைரஸ்களுக்கு துணை வகைகள் கிடையாது. அதற்கு பதிலாக B வைரஸ்கள் B/Yamagata அல்லது B/Victoria என பரம்பரையாக பிரிக்கப்படுகிறது.
- இன்ஃபுளூயன்ஸா சி வைரஸ்கள் தீவிரமான தொற்றுக்களை உருவாக்குவது கிடையாது. இதனால் பொது சுகாதாரத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.
- இன்ஃபுளூயன்ஸா டி வைரஸ் கால்நடைகளை பாதிக்கக்கூடியதாகும். இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

இன்ஃபுளூயன்ஸா காய்ச்சல் அறிகுறிகள்:
இன்ஃபுளூயன்ஸா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் வெளியே தென்பட ஆரம்பிக்கும்.
- திடீர் காய்ச்சல்
- வறட்டு இருமல்
- தலைவலி
- தசை மற்றும் மூட்டு வலி
- கடுமையான உடல்நலக்குறைவு
- தொண்டை வலி
- மூக்கு ஒழுகுதல்
இருமல் வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கக்கூடும்.
அதிக பாதிப்பு யாருக்கு?
கர்ப்பிணிப் பெண்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம், வளர்சிதை மாற்றம், நரம்பியல் வளர்ச்சி, கல்லீரல் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஹெச்.ஐ.வி., கீமோதெரபி, ஸ்டெய்ராய்டு மருந்துகளை உட்கொள்வோர் இன்ஃபுளூயன்ஸா நோயால் பாதிக்கப்பட்டால் விளைவுகள் தீவிரமாக இருக்கும்.
இன்ஃபுளூயன்ஸா ஏ வைரஸ் விரைவாக பரவக்கூடியது என்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ பணியாளர்கள், நோயாளிகளை பராமரிப்பவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகம்.
யாருக்கெல்லாம் சிகிச்சை கட்டாயம்:
பொதுவாக இன்ஃபுளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்திற்குள் தாங்களாகவே குணமடைந்துவிடுவார்கள். ஆனால் கடுமையான அறிகுறிகள் அல்லது பிற மருத்துவ நிலைமைகளால் பாதிக்கப்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெறுவது கட்டாயமாகும்.
லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?
- மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க வீட்டிலேயே இருக்க வேண்டும்.
- நிறைய திரவங்களை உட்கொள்ளுதல்
- காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடுமையான அறிகுறிகள் உள்ளவர்கள் விரைவில் வைரஸ் தடுப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற வேண்டும். அவர்கள் யார் என்று விரிவாக பார்க்கலாம்.
- கர்ப்பிணி பெண்கள்
- 59 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகள்
- 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்
- நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
- கீமோதெரபி பெறுவோர்
- எச்.ஐ.வி போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய நோய்க்கு சிகிச்சை பெறுவோர்
தடுப்பு நடவடிக்கைகள்:
- இன்ஃபுளூயன்ஸா காய்ச்சலைத் தடுக்க தடுப்பூசி போடுவதே சிறந்தது என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
- பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் மறைந்துவிடும், எனவே காய்ச்சலுக்கு எதிராக பாதுகாக்க வருடாந்திர தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
- வயதானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது நோயின் தீவிரம் மற்றும் இறப்பை குறைக்க உதவுகிறது.
யாரெல்லாம் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்:
- கர்ப்பிணி பெண்கள்
- 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள்
- 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்
- நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் கொண்டோர்
- சுகாதார ஊழியர்கள்
காய்ச்சலைத் தடுப்பதற்கான பிற வழிகள்:
- உங்கள் கைகளை அடிக்கடி கழுவி உலர வைக்கவும்
- இருமல் அல்லது தும்மும் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும்.
- காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தங்களிடம் இருந்து பிறருக்கு பரவுவதை தவிர்க்கும் வகையில் வீட்டிலேயே ஓய்வில் இருக்க வேண்டும்.
- நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்
- கைகளால் அடிக்கடி கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
Image Source: Freepik