கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்... எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல...!

தற்கொலை என்பது ஒரு தனிமனிதனின் பிரச்சினை அல்ல. அது ஒரு சமூகப் பிரச்சினை. குடும்பம் என்ற அமைப்பு எத்தனை வலிமையானது என்பதைச் உணர்த்துவது, வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களும் வலியான நிமிடங்களும்தான். வெற்றியிலும் தோல்வியிலும் பின்னே இருக்கும் அந்தக் குடும்பம்தான், சில வேளைகளில் துயரமான முடிவுக்கும் காரணமாகிவிடுகிறது.
  • SHARE
  • FOLLOW
கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்... எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல...!


பரிட்சையில் தோல்வியடைந்தால், காதல் கைகூடவில்லை என்றால், தொழிலில் நஷ்டமடைந்தால் என இப்போதெல்லாம் எடுத்ததெற்கெல்லாம் தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன. நாட்டில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் தமிழகமும், மாநகரங்களில் சென்னையும் முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2 லட்சத்தை தாண்டுகிறது. இதற்கான காரணம் என்ன? தீர்வு தான் என்ன?

தற்கொலை என்பது ஒரு தனிமனிதனின் பிரச்சினை அல்ல. அது ஒரு சமூகப் பிரச்சினை. குடும்பம் என்ற அமைப்பு எத்தனை வலிமையானது என்பதைச் உணர்த்துவது, வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களும் வலியான நிமிடங்களும்தான். வெற்றியிலும் தோல்வியிலும் பின்னே இருக்கும் அந்தக் குடும்பம்தான், சில வேளைகளில் துயரமான முடிவுக்கும் காரணமாகிவிடுகிறது.

தற்கொலைக்கான காரணங்களில் 25 சதவிகிதம், குடும்பப் பிரச்னைகள்தான் என்கிறது ஓர் ஆய்வு. சொத்துப் பிரச்னை, கடன் பிரச்னை, காதல் பிரச்னை, தம்பதிக்குள் பிரச்னை, ஏதோ ஓர் அசம்பாவிதம் நடந்து, அதனால் மானப் பிரச்னை என்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள்தான் தற்கொலைக்கான காரணங்கள். தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களும்கூட பெற்றோரின் திட்டுகளுக்குப் பயந்துதான் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

ஒருவர் எடுக்கும் தவறான முடிவு அவரோடு முடிந்துவிடாது. அவர் குடும்பத்துக்கும் அதே அதிர்ச்சி இருக்கும். அதிலும், தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்து மீண்டு வந்தவர்களுக்கு இரண்டு விதமான மனநிலை இருக்கும். ‘எல்லோருக்கும் தெரிஞ்சுபோச்சே’ என்ற அவமானம், குற்ற உணர்வு ஒரு புறமும், ‘எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் விடுதலை என நினைச்சோம். இதிலும் தோத்துப் போயிட்டோமே என்ற மன அழுத்தம் மறுபுறம் இருக்கும்.

தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்து வந்தால், நல்லவேளை பிழைச்சு வந்ததான், செத்துப் போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?” என்ற ஆதங்கத்தில் சில நேரம் அன்பாகவும், சில நேரம் ”ஏன் இப்படிப் பண்ணனும்?” என்று கோபமாகவும் நேர் மற்றும் எதிர்மறை உணர்வுகள் மாறிமாறி குடும்பத்தாரிடமிருந்து வெளிப்படும்.

தற்கொலைக்கான காரணங்கள் :

  • காதல் தோல்வி / தேர்வில் தோல்வி
  • இணக்கமான உறவுகளின் ஈடு செய்ய முடியாத இழப்பு
  • தோல்விகளை எதிர்கொள்ள தெரியாமை .
  • மற்றவர்களுடன் நெருங்கி பழகாமல் தனிமையில் இருப்பவர்கள்.
  • அதிகமாக போதைப் பொருள்கள் பயன்படுத்துவர்கள் / குடிப்பழக்கம்
  • உடல் ஊனத்தின் காரணமாக ஏற்படும் மன வேதனை
  • வாழ்க்கையில் நம்பிக்கை இழத்தல்
  • இருத்தல்
  • அதிகமாக உணர்ச்சி வசப்படுவது
  • மற்றவர்களுடன் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருப்பது
  • தாழ்வு மனப்பான்மையின் காரணமாக
  • குற்றவுணர்ச்சியின் விளைவாக
  • பாலியல் பிரச்சனைகள்
  • எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டே இருப்பது
  • பொருளாதார பிரச்னைகளால்
  • மற்றவர்கள் தன்னை அங்கீகரிக்கவிட்டால்
  • கடன் தொல்லையால்
  • தாங்க முடியாத உடல் மற்றும் மன வேதனை
  • குழந்தை வளர்ப்பு முறை
  • கணவன் மனைவியை சந்தேகப்படுவதால்
  • நோய் அல்லது உடல் வலியால்

தற்கொலை எண்ணத்தை அடியொடு வேரறுக்க:

காதல் தோல்விகளும், தேர்வு தோல்விகளும் இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தேர்வு முடிவை எதிர்கொள்ளும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்க வேண்டியது பெற்றோர்கள்தான். இதனால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அடிப்படையில் நல்ல உறவு வேண்டும். தோழமையான ஓர் உறவை சின்ன வயதிலிருந்தே உருவாக்கி, குழந்தைகள் வளர வளர அந்த உறவை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான், ‘எது நடந்தாலும் நம் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம்’ என்ற நம்பிக்கை பிள்ளைகளுக்கு வரும்.

எந்தப் பிரச்னை என்றாலும் தயங்காமல் பகிர்ந்துகொள்ள முன்வருவார்கள். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு, பள்ளியிலும் வீட்டிலும், படிப்பு சார்ந்த பிரஷர் அதிகம் இருக்கிறது. அதனால்தான், அவர்களுக்குள் தேர்வு குறித்த பயமும் அதனால் எழும் மன அழுத்தமும் அதிகமாகிறது. குழந்தைகள் மனதில் மதிப்பெண் குறித்த பாரத்தை ஏற்றிவைப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.

நமக்குக் கல்வி அவசியம் தேவைதான். அதற்காக மதிப்பெண்கள் மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை. அதனால், தேர்வு நேரத்தில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் பயத்தைப் போக்கி, நம்பிக்கை அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. தேர்வில் ஒருவேளை தோல்வி அடைந்தாலும், ”பரவாயில்லை திரும்பவும் எழுதி பாஸ் பண்ணிக்கலாம். இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை” என்று மன ஆறுதலைக் கொடுங்கள்.

‘எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் பெற்றோர் இருக்கிறோம்’ என்பதை குழந்தைகளுக்குத் தெளிவுபடுத்துங்கள். ”ஃபெயில் ஆனா என்னப்பா? இதோட வாழ்க்கையே முடிஞ்சுபோகலை. இதுக்கு மேலயும் இருக்கு என்று நம்பிக்கை வார்த்தைகள் தந்து ஆசுவாசப்படுத்துங்கள்.

இப்படி இணக்கமாக வீட்டுச் சூழ்நிலை இருந்தால், எந்தப் பிள்ளையும் ரிசல்ட் வந்ததும் வீட்டை விட்டு ஓடிப் போக மாட்டார்கள். இதே போல் பிள்ளைகள் காதல் விசயம் தெரிந்தவுடன் வீட்டில் கிளம்பும் எதிர்ப்புகளும், காதல் தோல்விகளையும் இன்றைய இளைஞர்களை அதிகமாக பாதிக்கிறது. பிள்ளைளுக்கான பிரச்சனைகளை அவர்களுடன் மனம்விட்டு பேசுங்கள். அவர்கள் தெரிவிக்காத போது, அவர்கள் நண்பர்களிடம் பேசி தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றி விடலாம். அவர்களுக்கு தற்கொலை எண்ணமும் தோன்றாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

 

தற்கொலை சிந்தனைகள் உள்ளவர்களை கண்டறிவது எப்படி?

ஒவ்வொருவரின் நடத்தை குணநலன்களை உற்று கவனிக்க வேண்டும்.அப்போது சாதாரண மனநிலையில் இருப்பவர்களை விடவும் இவர்கள் வேறுபட்டு காணப்படுவார்கள் , உதாரணமாக மனக்கவலை, தாழ்வு மனப்பான்மை, மற்றவர்களை சார்ந்திருப்பவர்கள் இவர்களிடம் தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். இவர்களை கண்டறிந்து முதலில் இவர்களின் முழுத் தகவல்களை பெற வேண்டும்.

இவர்களுடைய அடிப்படை பிரச்சனைகளை இவர்களின் பெற்றோர்களிடமும், குடும்பத்தினரிடமும் கேட்டறிந்து அதற்கான சரியான தீர்வுகளை வழங்க வேண்டும். குடும்பத்தினரிடமிருந்தும் நண்பரிடமிருந்தும் விலகி இருப்பார்கள். எப்போதும் கவலையோடிருப்பார்கள். அதே போல் சுற்றி நடக்கும் எந்த நிகழ்விலும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.

தூங்காமல் இருப்பார்கள். அவர்களின் உடல் எடையிலும் மாற்றம் காணப்படும். ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றிருப்பவர்களை இன்னும் உஷாராக கவனிக்க வேண்டும். உயில் எழுதுதல், இன்சூரன்ஸ் முதலியவைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நினைப்பார்கள்.

தற்கொலை சிந்தனையுடையவர்களுக்கு தனி நபர் ஆலோசனை வழங்க வேண்டும். அடிப்படை குணாதிசியத்தை மாற்றுவதற்கான பயிற்சிகளை கற்றுத் தர வேண்டும். இதில் பெரும்பாலும் ஒற்றை குழந்தைகளை வளர்ப்பவர்கள் அவர்களுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பதினால் தோல்வியை சந்திக்கவிடாமல் வளர்க்கின்றனர், தேர்வில்,தொழில்,காதல் என தோல்வி வரும் போது அதை எதிர்த்து சமாளிக்க முடியாமல் தற்கொலை சிந்தனைக்கு தள்ளபடுகிறார்கள்.

தற்கொலையை தடுக்கும் வழிகள் :

1மனநல மருத்துவரை ஆலோசித்து மருந்துகள் மூலம் தற்கொலை எண்ணங்களை கட்டுப்படுத்தலாம்.

 

2.குழந்தையிலிருந்தே தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கை வளர்ப்பதன் மூலம் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கலாம்.

3.அடிப்படை குணாதிசியத்தை மாற்றுதல்

4.மன தைரியத்தை அதிகப்படுத்துதல்

5.தனிமையைத் தவிர்த்து நண்பர்களுடன் இருத்தல்

6.அவர்களிடம் இருக்கும் வேறு சிறப்புகளை கண்டறிந்து அதில் அதிக கவனம் செலுத்துதல்

7.பள்ளி, கல்லூரி, மற்றும் பணிமனைகளில் கவுன்சிலிங் குழுவை ஏற்படுத்த வேண்டும் இக்குழுவின் நோக்கமானது தற்கொலை சிந்தனையுடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வராமல் தடுப்பதே கவுன்சிலிங் குழுவின் நோக்கம்.

Read Next

நட்பு காதலாக மாறுவதைக் காட்டும் இந்த 5 அறிகுறிகள் பத்தி தெரிஞ்சிக்கோங்க!

Disclaimer

குறிச்சொற்கள்