கர்ப்ப காலத்தில் இருந்ததை விட குழந்தை பிறந்த பின் அதிக கவனம் செலுத்த வேண்டும் இதில் பிறந்த குழந்தைக்கான சில பராமரிப்பு முறைகளைக் காணலாம்.
தலைப்பகுதி
குழந்தையின் தலைப்பகுதி நீள் வட்ட வடிவில் காணப்படும். பிறந்த குழந்தையின் கபால எலும்புகள் மென்மையாக இருக்கும். எனவே, மிகுந்து அழுத்தி பிடிக்காமல் மென்மையான அழுத்தம் தந்து பிடிக்க வேண்டும். இதன் மூலம் தலை வடிவம் சீராக இருப்பதை உணரலாம்.
கண்களில் அழுக்கு
பிறந்த குழந்தையின் கண்களிலிருந்து அழுக்குகள் வெளியேறிக் கொண்டே இருக்கும். அதை அவ்வப்போது சுத்தம் செய்யவும். ஆனால், கண்கள் அதிக மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
காது கேட்கும் திறன்
குழந்தைக்கு காது கேட்கிறதா என்பதை மெதுவாக காதில் சொடக்கு போட்டு கூப்பிடலாம். சத்தம் வரும் இடத்தில் குழந்தையின் கண்கள் பார்க்கும் போது காது கேட்பதை உறுதி செய்யலாம்.
தொப்புள் கொடி
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியைக் கட் செய்து க்ளிப் மாட்டி விடுவார்கள். இது அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் உதிர்ந்து விடும். எனினும், அவற்றில் தண்ணீர் படாமலும், கிருமித் தொற்று ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்புச் சக்தி
எப்போதும், குழந்தையைத் தூக்கும் போது சரியான முறையில் கைகளைக் கழுவி அதன் பின்னரே தூக்க வேண்டும். குறிப்பாக, நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் குழந்தையைத் தரக்கூடாது. பிறந்த குழந்தை தாயிடமிருந்து பெறும் நோய் எதிர்ப்புச் சக்தி நீண்ட காலம் வரை நீடிப்பதில்லை. எனவே, குழந்தைகளை வைரஸ் அல்லது பிற கிருமிகளில் இருந்து பாதுகாப்பது அவசியம்.